உல்லாசம் நகரில் பயங்கரக் கொலை... கள்ளக்காதலில் டிரைவரைப் போட்டுத் தள்ளிய நண்பன்!
சென்னை: சென்னை செங்குன்றத்தில் உள்ள உல்லாசம் நகர் என்ற இடத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தனது நண்பனை கூலிப்படையை கூட்டி வந்து சரமாரியாக கொலை செய்தார் ஒரு நபர். கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தடுக்கி விழுந்தால் ஒரு கள்ளக்காதல் கொலையாகி விட்டது தமிழகத்தில். தினசரி ஒரு கொலை இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர். 39 வயதாகிறது இவருக்கு. டேங்கர் லாரி ஓட்டி வந்தார். நேற்று இவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கொலை நடந்த இடம் செங்குன்றம், உல்லாசம் நகர். சேகரை கை, கால், தோள், வயிறு என உடலின் ஒரு பகுதி விடாமல் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது கொலைக் கும்பல்.
மலர் மீது வந்த மோகம்...!
சேகர் கொலைக்கு கள்ளக்காதல்தான் காரணம் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சேகர் சாமானியமான ஆள் கிடையாது. பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ஆள்தான். சமீ்ப காலமாகத்தான் டேங்கர் லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. குண்டாஸிலும் உள்ளே போய் வந்தவர்தான்.
சேகருக்கும், அவரது இணை பிரியா நண்பரான பிரகாஷ் என்பவரின் மனைவி மலருக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டிருந்ததாம். ஒரு வருடமாகவே இது ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. அடிக்கடி பிரகாஷைப் பார்க்க வீட்டுக்கு வருவாராம் சேகர். அப்போது பிரகாஷ் இல்லாவிட்டால் மலரைப் பார்த்து 'பேசி விட்டு'ப் போவாராம்.
சில சமயங்களில் மலரைப் பார்ப்பதற்காகவே பிரகாஷ் இல்லாத நேரமாக வந்து போவாராம். இந்த வந்து போகும் சமாச்சாரம் பிரகாஷுக்குத் தெரிய வரவே அவர் கோபமடைந்தார். அதேபோல சேகரின் மனைவி தேவிக்கும் தகவல் போய் விட்டது. அவர் அதிர்ந்தார், கணவரைக் கண்டித்தார்.
தடுத்த தேவியை வீடு தேடி வந்து மிரட்டிய மலர்!
மனைவி கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் மலர் மீதான காதலை நிறுத்தினார் சேகர். இது மலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது உறவுக்காரப் பெண்களைத் திரட்டிக் கொண்டு தேவி வீட்டுக்கு வந்தார். உன் புருஷனை தடுத்து நிறுத்துற வேலையை இத்தோட நிறுத்திக்கோ, அவரை வரக் கூடாது என்று சொல்ல நீ யார் என்று உரிமைப் போராட்டத்தில் குதித்தார்.
இனிமேல் சேகரை தடுத்தால் ஆசிட் வீசி கொன்று விடுவேன் என்றும் தேவியை மலர் மிரட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தேவி, போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் தன் பங்குக்கு சிலரைத் திரட்டிக் கொண்டு மலர் வீட்டுக்குப் போய் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். இதனால் பிரகாஷ், சேகர் இடையிலான நட்பு நாறிப் போனது, பிளந்து போனது.
தீர்த்துக் கட்ட திட்டம்
இந்த நிலையில் சேகரை தீர்த்துக் கட்ட பிரகாஷ் தீர்மானித்தார். இதற்காக கொலை செய்வதில் தேர்ந்தவர்களான சிலரை கூலிப்படையாக ஏற்பாடு செய்தார். தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் உல்லாசம் நகரில் ஒரு பட்டறையில் லாரியைப் பழுது பார்க்கும் பணியில் ஒரு வாரமாக தங்கியிருந்து சேகர் வேலை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு போய் போட்டுத் தள்ளி விட்டார்கள்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர், விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
நாளைக்கு எந்த ஏரியாவில் கொலை நடக்கப் போகுதுப்பா...?












Click it and Unblock the Notifications