மதுரையில் "வேன் குண்டு" வெடிக்கும்: சென்னைக்கு வந்த தகவலால் பரபரப்பு
சென்னை: மதுரையில் வேனில் வெடிகுண்டுகளுடன் தீவிரவாத கும்பல் ஒன்று சுற்றி வருவதாக சென்னை ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து மதுரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று மதுரையில் இருந்து பேசுவாதாகக் கூறிக் கொண்டு ஒரு நபர் பேசினார். "மதுரையில் ஏற்கெனவே சைக்கிள் குண்டு வெடித்திருக்கிறது.. தற்போது வேன் குண்டு வெடிக்க இருக்கிறது.. வேன் ஒன்றில் தீவிரவாதிகள் இதற்காகவே சுற்றி வருகின்றனர்" என்று அந்த மர்ம நபர் கூறியிருக்கிறார்.
மேலும் தம்மை ஒரு டாக்டர் என்றும் அவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறார். இத்தகவல் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. மதுரை காவல்துறைக்கும் இத்தகவல் அனுப்பி வைக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
சென்னைக்கு தகவல் கொடுத்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை போலீசார் கண்டுபிடித்து விசாரித்தனர். அவர் போதையில் வாய்க்கு வந்தபடி உளறியிருப்பது தெரியவந்தாலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இத்தகைய வெடிகுண்டு மிரட்டல் தகவலால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications