நெல்லையை உலுக்கும் டெங்கு: நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
நெல்லை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற பயத்தில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், கடையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டார் நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை வெளியூரில் இருந்து வந்துள்ள மருத்துவக் குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை புதுவை மாநிலத்திலிருந்து பொது சுகாதார துறை சிறப்பு மருத்துவக் குழுவினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு டெங்கு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் ரத்த மாதிரியை சேகரித்தனர். கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் முதல் முறையாக உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் நோய் பாதித்தவர்களின் ரத்தங்களை 4 விதமாக பரிசோதித்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால் கூட டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என பயந்து பலர் ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications