ஐ.ஜி. பிரமோத்குமார் சென்னை புழல் சிறையில் அடைப்பு
கோயம்புத்தூர்: திருப்பூர் பாசி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜி - பிரமோத்குமார் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பாசி நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பலர் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். இதில் பாசி நிறுவனத்திற்கு ரூ 1,600 கோடி வரை முதலீடு சேர்ந்தது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை உரிய காலத்தில் திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குகள் சிபிஐ போலீசார் வசம் ஒடைப்படைக்கப்பட்டது.
இதனால், தலைமறைவாக இருந்த பாசி நிதி நிறுவனத்தின் இயக்குனர்களை சிபிஐ போலீசார் கைது செய்தனர். மேலும், திருப்பூர் பாசி நிறுவன மோசடி வழக்கை விசாரித்தபோது மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத்குமார், அதன் நிர்வாக இயக்குனரிடம் ரூ.2.93 கோடி லஞ்சமாகப் பறித்ததாகவும் புகார் எழுந்தது. இதன் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ போலீசார் கடந்த 2 ந் தேதி பிரமோத்குமாரை டெல்லியில் கைது செய்தனர்.
இதனையடுத்து, கோவையில் பிரமோத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 நாள் விசாரணை நடத்தினர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு, திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி.-யாக இருந்த போது குற்றவாளிகள் பலரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளேன். எனவே, நான் கோவை சிறையில் இருந்தால், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் பிரமோத்குமார் மனு அளித்தார். இதை ஏற்றுக் கொண்டு பிரமோத்குமாரை சென்னை புழல் சிறைக்கு மாற்றியுள்ளனர்.