தாராபுரத்தில் அதிர்ச்சியில் உறைய வைத்த காலாவதி பால்பவுடர் டின்கள்
தாராபுரம்: தாராபுரத்தில் மருந்துக் கடை ஒன்றில் ஏராளமான காலாவதியான பால்பவுடர் டின்கள் விற்பனை செய்யப்பட்டதை பொதுமக்களே கண்டுபிடித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
தாராபுரத்தைச் சேர்ந்த மணிண்டனின் மனைவி லோகேஸ்வரி தமது குழந்தைக்காக பால்பவுடர் டின் ஒன்றை மருந்துக் கடையில் வாங்கியுள்ளார். அந்த பால்பவுடரை தமது குழந்தை அஸ்வினிக்குக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த குழந்தை சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தது. இதனால அதிர்ச்சியடைந்த லோகேஸ்வரி, குழந்தை குடித்த பாலை பார்த்திருக்கிறார். அதில் புழுக்களும் வண்டுகளும் மிதந்து கிடந்தன். குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பால்பவுடர் வாங்கிய கடைக்கு குழந்தையின் பெற்றோர் சென்று வேறு ஒரு பால்பவுடர் டின்னை வாங்கிப் பார்த்தனர். அதிலும் வண்டுகளும் புழுக்களும் உலாவிக் கொண்டிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்து உறவினர்களுடன் அந்த மருந்துக் கடை முன்பாக மணிகண்டன் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தனியாக புகார் அளிக்கக் கூறினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகளும் ஆய்வு செய்தது பார்த்ததில் அனைத்து பால்பவுடர் டின்களுமே காலாவதியானவை எனத் தெரியவந்தது. அதனால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு பால்பவுடர் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலு திருப்பூர் மாவட்டம் முழுவதும் மருந்துக் கடைகளில் காலாவதி பால்பவுடர் டின்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.