சௌரிய சக்ரா விருது பெற்ற மேஜர் கார்த்திக் ராஜாவுக்கு ஜெயலலிதா ரூ.5 லட்சம் பரிசு

முப்படைகளில் வீரதீர செயல் மற்றும் சிறப்பாக பணியாற்றியமைக்காக விருது மற்றும் பதக்கம் பெறும் தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு பண முடி வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பண முடியை கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி சௌரிய சக்ரா விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.45,000க்கான பணமுடி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம், துபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேஜர் எஸ்.கார்த்திக் ராஜா ஒரு படையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு சென்றார்.
அங்கு தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தீவிரவாதிகளுடன் சண்டைபோட்டு அதில் 5 தீவிரவாதிகளையும் கொன்று போர் தளவாடங்களையும், பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினார். இதையடுத்து ராணுவத்தில் தீரத்துடனும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுவோருக்கும், தீவிரவாத தடுப்பு தாக்குதலின்போது தீரத்துடன் பணிபுரிவோருக்கும் வழங்கப்படும் சௌரிய சக்ரா விருதுக்கு கார்த்திக் ராஜா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.
சௌரிய சக்ரா விருது பெற்ற தமிழக வீரர் கார்த்திக் ராஜாவின் தீரத்தை பாராட்டி முதல்வர் அவருக்கு ரூ.5 லட்சம் பணமுடி வழங்கி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications