வைகோவிடம் நன்றி தெரிவித்தார் சுக்மா ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனன்
சென்னை: மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து தம்மை விடுவிக்க குரல் கொடுத்ததற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ்பால் மேனன் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியரான அலெக்ஸ் பால்மேனன். கடந்த மாதம் 21-ந்தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார் தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனனை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்திலிருந்து பலர் குரல் கொடுத்தனர்.
மாவோயிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலெக்சை மாவோயிஸ்டுகள் இம்மாதம் 3-ந்தேதி விடுவித்தனர்.
விடுதலையான பிறகு தமிழகத்துக்கு வந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை மே 16-ந்தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து தமது விடுதலைக்காக நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நேற்று நேரில் சந்தித்து நன்றி கூறினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆட்சியரின் மனைவியும் உடன் இருந்தார். தம்மை விடுதலை செய்ய குரல் கொடுத்ததற்காக வைகோவிடம் அலெக்ஸ்பால் மேனன் நன்றி கூறினார்.