சஞ்சய் ஜோஷி ராஜினாமா செய்ததால் பாஜக கூட்டத்தில் மோடி பங்கேற்பு!
மும்பை: மும்பையில் இன்று நடைபெற உள்ள தேசிய செயற்குழுக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சமாதானப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருந்த சஞ்சய் ஜோஷி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மோடி அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மும்பையில் இன்றும் நாளையும் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தின் முதல்வரான மோடியும் கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரான எதியூரப்பாவும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர். (பதவி தராததால் எதியூரப்பா கலந்து கொள்ளவில்லை)
சஞ்சய் ஜோஷிக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த காலத்திலுமே ஆகாது. இருவரும் ஒருவரை ஒருவர் வாரிவிடுவதில் கவனம் செலுத்துபவர்கள்.
இந் நிலையில் சஞ்சய் ஜோஷி ஒரு ஆபாச சிடி விவகாரத்தில் சிக்கினார். இது பாஜக தேசிய மாநாடு நடக்கும்போது வெளியாகி பாஜகவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்தது.
ஆனாலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது சஞ்சய் ஜோஷியை உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக பாஜக தலைவர் நிதின் கத்காரி நியமித்திருந்தார். இதனால் கடுப்படைந்த மோடி உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்துக்கே போகவில்லை.
மேலும் குஜராத்தில் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலை தமக்கு எதிராக கொம்பு சீவிவிடுவதாகவும் கத்காரி மீது மேலும் கடுப்பில் இருந்தார் மோடி. இதனால் இன்றும் நாளையும் நடக்கும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்தார்.
இந்நிலையில் மோடியை சமாதானப்படுத்தும் வகையில் அருண் ஜேட்லி போன்றோர் களமிறக்கிவிடப்பட்டனர். ஜேட்லியின் முயற்சியால் ஜோஷியை ராஜினாமா செய்ய வைத்துள்ளது பாஜக.
இதையடுத்து மோடி இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மகாராஜா ராணாபிரதாப் சிங்கின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்த மோடி திடீரென மும்பைக்கு வந்து பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதேபோல் கர்நாடக முன்னாள் முதல்வரான எதியூரப்பாவும் தேசிய செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அவர் தமக்கு முதல்வர் பதவியைக் கொடுக்காத நிலையில் கத்காரி மீது காட்டத்தில் இருக்கிறார். அவரையும் சமாதானப்படுத்த அருண் ஜேட்லியை இறக்கிவிட்டனர்.
இந்நிலையில் கத்காரிக்கே 2-வது முறையாக தலைவர் பதவி நீட்டிப்புக்கான வாய்ப்புக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து நிலவி வருகிறது. கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை மீண்டும் கொண்டுவந்து தேவையற்ற கோஷ்டி பூசல்களை உருவாக்கியது, ஜார்க்கண்ட் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் அனுஷ்மன் மிஸ்ராவை இறக்கியதால் கட்சியில் பெரும் உள்கலகம் ஏற்பட்டது. அதனால் கத்காரியின் பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்க கடும் எதிர்ப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இவை அல்லாமல் இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக வியூகம் வகுக்கப்பட இருக்கிறது என்கின்றன பாஜக வட்டாரங்கள்












Click it and Unblock the Notifications