கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது... வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு திருநங்கைகள் போராட்டம்!
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சகாயம். நேர்மையானவராக அறியப்பட்ட இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம். திமுக, அதிமுக என்று பாகுபாடு காட்டாமல் ஸ்டிரிக்ட்டாக இருந்தவர் சகாயம்.
தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இவரைக் கண்டு அப்போதைய திமுக ஆட்சியாளர்களே கையைப் பிசைந்தபடி இருந்தனர். அதிமுக ஆட்சிக்காலத்திலும் அவர் மாற்றப்படாமல் தொடர்ந்து நீடித்தார்.
நமது ஆட்சிதானே என்று அதிமுகவினராலும் சகாயத்தை நெருங்க முடியாத நிலையே இருந்தது. குறிப்பாக அமைச்சர்கள் யாரும் சகாயத்தை நெருங்க முடியவில்லை, காரியம் சாதிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மதுரை ஆதீன விவகாரம், மு.க.அழகிரி மகன் கல்லூரி விவகாரம் என பல முக்கியப் பிரச்சினைகளையும் டீல் செய்து வந்தார் சகாயம். இந்த நிலையில்தான் அவரை திடீரென கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக உப்புச் சப்பில்லாத பதவிக்கு மாற்றியுள்ளது அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று 50 விவசாயிகள் திரண்டு வந்து கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர். நேர்மையான அதிகாரியான கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது என்று அவர்கள் அரசுக்குக் கோரிக்கையும் விடுத்தனர்.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளும், திருநங்கைகளும் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து சகாயத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
சகாயத்தை மாற்றக் கூடாது, மதுரையிலேயே தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். அப்போது திருநங்கைள் ஒன்றாகக் கூடி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் வாயிலும்,வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதனர். தரையில் உருண்டும் அழுதனர். வளையல்களை உடைத்துப் போட்டு குமுறிக் குமுறி அழுதனர்.
சகாயத்தை மாற்றக் கூடாது, அவருக்காக தொடர்ந்து போராடுவோம், உயிரைக் கொடுக்கவும் தயார் என்று அவர்கள் ஆவேசமாக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.