சட்டசபையில் வாயைத் திறக்கவே விடமாட்டேங்குறாங்க: துரைமுருகன் குமுறல்
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும், பால், பேருந்து, மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் வேலூர் மாவட்ட திமுக சார்பில் இன்று வேலூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் காந்தி, முன்னாள் மேயர் கார்த்திகேயன், நகர செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வை எதிரி்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது துரைமுருகன் பேசியதாவது,
மத்திய அரசு பெட்ரோல் விலையை ஒரேயடியாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்த வரியோடு மாநில அரசு அதிக வரியை விதித்துள்ளது. திமுக ஆட்சியில் மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியபோது நாங்கள் வரியை உயர்த்தவில்லை. தமிழகத்தில் பேருந்து கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ.4,000 கோடி வரிச்சுமை ஏற்பட்டுள்ளது.
எனக்கும் சட்டம் தெரியும். கடந்த 30 ஆண்டு காலமாக சட்டசபைக்கு செல்கிறேன். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அங்குள்ளவர்களால் பதில் கூற முடியாது என்பதால் சட்டசபையில் என்னை பேச விடாமல் தடை செய்கிறார்கள். ஆனால் நான் மக்கள் மத்தியில் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.