வெள்ளை காக்கா பறக்குது.. சிவப்பு யானை வருது.. மின்சார வாரியம் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் தற்போது மின் தட்டுப்பாடே இல்லை என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
எண்ணூர் அனல் மின்நிலையம் சுமார் 40 வருட பயன்பாட்டில் உள்ள பழமையான அனல் மின் நிலையம் ஆகும். இதன் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்ட காணத்தால் இந்த மின் நிலையத்தை நிறுத்திவிட்டு அதே இடத்தில் அதிக உற்பத்தி திறனுள்ள (660 மெகாவாட்) புதிய மின் நிலையம் அமைக்க அரசால் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, பெரிய அளவில் மூலதன பொருட்கள் வாங்காமல் குறைந்த செலவில் எண்ணூர் அனல் மின் நிலையம் பராமரிக்கப்பட்டு இயன்ற அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில், 5-வது யூனிட் பழுதடைந்த காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் உற்பத்தி இல்லை. 3-வது யூனிட்டில் உள்ள டர்பைனை பழுது பார்த்து சீரமைக்கும் பணி நடக்கிறது. 4-வது யூனிட்டில் உள்ள குளிர்விப்பானில் கடந்த 25ம் தேதி முதல் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 2 யூனிட்டுகளும் தலா 32 மெகாவாட் உற்பத்தியில் இருந்து வந்தன. ஆனால், கோடைக்காலம் என்பதால் டர்பைன் குளிர்விப்பானில் வெற்றிடம் குறைவாகவே இருந்து வந்தது.
குளிர்விப்பதற்காக கடலில் இருந்து கொண்டு வரப்படும் குளிர் நீர் மிகவும் மாசடைந்த நிலையில் உள்ளதால் இத்தகைய பழுதுகள் அடிக்கடி ஏற்படுதல் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. பழுதுகள் சரி செய்யப்பட்டு எண்ணூர் அனல் மின் நிலையம் உடனடியாக மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, காற்றாலை மின் உற்பத்தி அதிகமானதாலும், மேட்டூர் அனல் மின்நிலைய பழுது சரிசெய்யப்பட்டு உற்பத்தி தொடங்கிவிட்டதாலும் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால், உங்கள் வீட்டில் கரண்ட் இல்லாவிட்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தையோ அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தையோ அல்லது தமிழக அதிமுக அரசையோ குறை கூறாதீர்கள். உங்கள் வீட்டுக்கு வந்த மின்சாரத்தை வழியில் காக்கா கொத்திக் கொண்டு போயிருக்கலாம். சரியா!.