நெல்லை அருகே குடிநீர் கேட்டு அமைச்சர்களை விஜய், செந்தூர் பாண்டியனை முற்றுகையிட்ட மக்கள்
நெல்லை: நெல்லை அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் அமைச்சர்கள் விஜய், செந்தூர் பாண்டியன் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் நெல்லை வந்தார்.
நெல்லை, கடையநல்லூர், தென்காசி பகுதிகளில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணியில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக வாசுதேவநல்லூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைக்க அமைச்சர்கள் விஜயும், செந்தூர் பாண்டியனும் சென்றனர்.
அப்போது புளியங்குடி மக்கள் தங்கள் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த அமைச்சர்கள் கீழே இறங்கினர். உடனே பொது மக்கள் இரண்டு அமைச்சர்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள் உடனே லாரியில் குடிநீர் வரவழைத்து சப்ளை செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.