போக்குவரத்து ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் இயங்கி வரும் எட்டு போக்குவரத்து கழகங்களில் பணி புரியும் அலுவலர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கி வரும் அகவிலைப்படியை 1.1.2012 முதல் 58 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, நிலுவை இன்றி ரொக்கமாக 1.1.2012 முதல் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 10 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் போக்குவரத்துக் கழகங்களில் பணி புரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 764 பணியாளர்களும், 41 ஆயிரத்து 520 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும், பணியாளர்களும் மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் மக்கள் பணியாற்ற உத்வேகம் அளிக்கும் என நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.