விமானத்தை லாவகமாக தரையிறக்கி 48 உயிர்களை காத்த பெண் பைலட்டுகள்
குவாஹாத்தி: அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கிளம்பிய விமானத்தின் முன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்ததையடுத்து விமானத்தை ஓட்டிய பெண் விமானிகள் இருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர்.
அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள கும்பிர்கிராம் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்திய விமானம் ஒன்று 48 பயணிகள், 2 விமானிகள், 4 பணியாளர்களுடன் நேற்று காலை குவஹாத்திக்க்கு புறப்பட்டது. விமானம் கிளம்பியவுடனேயே அதன் முன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது. இதைப் பார்த்த தரைக்கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இது குறித்து விமானி ஊர்மிளா மற்றும் துணை விமானி யஷு ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக லோகோபிரியோ கோபிநாத் பர்டோலாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தை இறக்கும்போது தீப்பிடித்து விடாமல் இருக்க அதில் இருந்த எரிபொருள் தீரும் வரை விமானம் சற்று நேரம் வானில் வட்டமடித்துள்ளது. எரிபொருள் தீர்ந்த பிறகு ஊர்மிளா விமானத்தை லாவகரமாக தரையிறக்கினார்.
விமானியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்ப்டடு 48 பயணிகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தனை உயிர்களைக் காப்பாற்றிய விமானிகள் ஊர்மிளா, யஷுவை அசாம் முதல்வர் தருண் கோகாய் பாராட்டியுள்ளார். ஊர்மிளாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய கோகாய் அவரை பாராட்டியதுடன் யஷுவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.