தொழிற்துறைக்கு மீண்டும் சிறப்பு வரிச் சலுகைகள் கிடையாது: பிரணாப் திட்டவட்டம்
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், உற்பத்தி விகிதம் குறைந்துள்ளது. பொருளாதார தேக்க நிலையை சமாளித்து உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு சிறப்பு வரிச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்துறை அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த வருமான வரித்துறை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே வழங்கப்பட்டது போன்று மீண்டும் தொழிற்துறைக்கு சிறப்பு வரிச் சலுகைகள் வழங்க முடியாது.
சுரங்கத் துறை வளர்ச்சி கண்டு வருவதும், பருவ மழை சிறப்பாக இருக்கும் என்பதாலும் பொருளாதார தேக்கத்திலிருந்து எளிதாக மீள வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாலும், முதலீடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் பொருளாதார சரிவு தாக்கத்திலிருந்து மீள்வதற்கு சாதகமாக இருக்கின்றன. உற்பத்தியை பெருக்குவதற்கு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, தொழிற்துறைக்கு மீண்டும் சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் வழங்கும் திட்டமில்லை என்று பிரணாப் கூறினார்.
கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார சரிவு கண்டபோது தொழிற்துறைக்கு மத்திய அரசு 1.86 லட்சம் கோடிக்கு சிறப்பு வரிச் சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.