பாலியல் புகாரை எதிர்த்து 'கேஸ்' போட்டார் நித்தியானந்தா!
தலைமறைவாக உள்ள அவர் சார்பில் அவரது வக்கீல்கள் வந்து மனுவைத் தாக்கல் செய்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தி ராவ் என்ற பெண், சமீபத்தில் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நித்தியானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார். இதை நித்தியானந்தா மறுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் ஏற்பாடு செய்த பிரஸ் மீட்டின்போது, கலாட்டா ஏற்பட்டது. கன்னட டிவிசேனலான சுவர்ணா டிவியின் செய்தியாளரை நித்தியானந்தா ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. தொடர் போராட்டங்களில் குதித்தன. நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டு வெளியேற்றவேண்டும், அவரது மடத்தை கைப்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தன. இதற்குப் பணிந்த கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா, நித்தியானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட்டார்.மடத்தையும் சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அதுதொடர்பான நடவடிக்கைகளை கர்நாடக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வது தொடர்பான சட்ட ஆலோசனைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையி்ல தன் மீது போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி நித்தியானந்தா சார்பில் அவரது வக்கீல்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
நித்தியானந்தா மீது ஏற்கனவே பாலியல் மோசடி வழக்குகள் கர்நாடகத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.