மதுரையில் அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: கவுன்சிலர் கைது, 5 பேருக்கு வலை
மதுரை: மதுரையில் அதிமுக வட்ட செயலாளராக இருந்த மனோகரன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை அனுப்பானடியை அடுத்த சின்னஅனுப்பானடியைச் சேர்ந்தவர் மனோகரன் (55). மதுரை மாநகர 58வது வட்ட செயலாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (48). சின்னஅனுப்பானடி ஊராட்சியாக இருந்தபோது 2வது வார்டு அதிமுக செயலாளராக இருந்தவர். பூமிநாதன் 2வது வார்டு செயலாளராக இருந்தபோது மனோகரன் 1வது வார்டு செயலாளராக இருந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி குடிநீர் குழாய் பதிப்பது தொடர்பாக மனோகரன் மற்றும் பூமிநாதன் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த கட்சியினர் அவர்களை விலக்கிவிட்டனர். இந்த மோதல் நடந்த அன்று இரவு பூமிநாதன் தனது மைத்துனர் முருகனுடன் அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனோகரனும், அவரது தம்பி அய்யப்பனும் டீ குடித்துக் கொண்டி்ருந்த பூமிநாதனையும், முருகனையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அடிவாங்கிய இருவரும் காயமடைந்தனர். பின்னர் இது குறித்து மனோகரன் மீது வழக்குப் பதிவு செய்த அவனியாபுரம் போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதையடுத்து மனோகரனும், பூமிநாதனும் இருகோஷ்டிகளாகிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் தினமும் பொழுது விடியும் முன்பு டீ குடிக்கும் பழக்கம் உடையவர் மனோகரன். நேற்றும் விடியும் முன்பு டீக்கடைக்கு வந்தார் மனோகரன். அவருக்காக பூமிநாதன் தரப்பு இருளில் ஒளிந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்றவர் குண்டும், குழியுமாக இருந்த சாலையில் கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும் மனோகரனும், அங்கிருந்த சிலரும் சென்று கீழே விழுந்தவரை தூக்கினர். அப்போது அங்கு மறைந்திருந்த பூமிநாதன் மற்றும் அவரது ஆட்கள் மனோகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் துடிதுடித்த அவரை சிகிச்சைக்காக மதுரை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மெட்ராஸ் முருகன் (51), பாண்டி (37), ராஜா (22), பாலமுருகன் (23), பூமிநாதன் (48), மாநகராட்சி 58வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராமசுப்பிரமணி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் கவுன்சிலர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 5 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.
கொல்லப்பட்ட மனோகரனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், அரிகரன், சுதாகரன், நாகஜோதி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.