இதுக்கு மேலயும் அப்துல்கலாம் போட்டியிடக் கூடாது: உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியை அனைத்து தரப்பும் ஆதரிக்கின்ற நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டின் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக இருந்தவர் அப்துல்கலாம். மக்கள் மனதில் நிறைந்தவர் அவர். இந்த நிலையில் வெற்றி வாய்ப்பில்லாத ஒரு சூழலில் அவர் மீண்டும் போட்டியிடக் கூடாது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வருவது சரியான தேர்வுதான். அவருக்கு கிடைத்திருக்கும் ஆதரவு அவர்தான் குடியரசுத் தலைவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்
டிவிட்டரில் நேற்றே பிரணாப் முகர்ஜிக்கு உமர் அப்துல்லா வாழ்த்துத் தெரிவித்துவிட்டார். மேலும் மமதா பானர்ஜியைப் பொறுத்தவரையில் அவருக்கு அறிவுரை எதுவும் சொல்லத் தேவையில்லை. எது செய்ய வேண்டும் ? செய்யக் கூடாது என்பது அவருக்குத் தெரியும். இருப்பினும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றும் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்திருந்தார்