புதுக்கோட்டை தேர்தல் முடிவு மூலம் அதிமுக அரசுக்கு சாட்டையடி விழுந்துள்ளது: விஜயகாந்த்
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வாக்காளர்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் சுனாமி போல செயல்பட்டனர்.
இந்த சுனாமியை எதிர்த்து நமது இயக்க தோழர்கள் தங்களது உழைப்பின் மூலம் தேமுதிக வேட்பாளருக்கு 30,500 (21.3சத வீதம்) வாக்குகள் பெற்று தந்து ஆளும் கட்சியினருக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
எந்த எதிர்க்கட்சியும் டெபாசிட் வாங்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் புதுக்கோட்டை வாக்காளப் பெருமக்கள் தேமுதிகவிற்கு டெபாசிட் பெற்றுத்தந்துள்ளனர். இதற்கும் மேலாக, ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடியாகத் தான் இந்த தேர்தலை பார்க்க வேண்டும்.
பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி விட்டு, பணத்தை அள்ளிக் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற ஆட்சியாளர்களின் கனவுக்கு 30,500 வாக்காளர்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.
ஓராண்டு சாதனை என்றும் மக்கள் வரிப் பணத்தில் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் தேடிக் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் தன்னைத் தவிர வேறு அரசியல் தலைவரோ, தனது கட்சியை தவிர வேறு அரசியல் கட்சியோ இருக்கக் கூடாது என்ற போக்கிற்கு எதிராக புதுக்கோட்டை வாக்காளர்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி்யாகும்.