உற்பத்தி குறைவு: கோழிக்கறி விலை கிடுகிடுவென உயர்வு
அசைவப்பிரியர்கள் அன்றாடம் அதிகம் சாப்பிடும் உணவுகளில் கோழிக்கறி மற்றும் கோழி முட்டை முதலிடத்தில் உள்ளது. முன்பெல்லாம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கோழிக்கறி விலை அதிகரித்து பின்னர் குறையும். ஆனால் சமீபகாலமாக கோழிக்கறி விலை தங்கம் விலை போல் அடிக்கடி அதிகரி்க்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ கோழிக்கறி விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. இது திடீரென உயர்ந்து ரூ.160 வரை கூடியுள்ளது. ஞாயிறு விடுமுறை நாட்களில் இதை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
இது குறித்து தென்காசி கறிக்கோழி பண்ணை உரிமையாளர் ராஜா என்பவர் கூறுகையில்,
இந்த கோடை காலத்தில் நாமக்கல்லில் இதுவரை இல்லாத அளவுக்கு கறிக்கோழி உற்பத்தி குறைந்துள்ளது. 10,000 கோழிகள் உற்பத்தியான இடத்தில் 8,000 கோழிகள் உற்பத்தியாகி உள்ளன. மேலும் கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து கறிக்கோழி அனுப்பப்படுவது அதிகரித்துள்ளது. உயிருடன் அங்கு கோழியை கொண்டு சென்றால் அதிக வரி விதிக்கப்படுகிறது. அதனால் கேரள வியாபாரிகள் களியக்காவிளை வந்து உறித்த கோழியை இறைச்சியாக வாங்கிட் செல்கின்றனர். இந்த வழியாக மட்டும் தினமும் 50,000 கிலோ கறிக்கோழிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் காரணமாகவும் விலை உயர்ந்துள்ளது. இதுபோல் ஒரு முட்டை ரூ.3.40 என மொத்த கடைகளில் விற்கப்பட்டாலும் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.3.75 வரை விற்கப்படுகிறது.