சுரங்க ஊழல்: எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, தரம்சிங்கை விசாரிக்க கர்நாடக அரசு முடிவு!
பெங்களூர்: கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில் 3 முன்னாள் முதல்வர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் அமைத்துள்ள மத்திய குழுவிடம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் தற்போது மத்திய அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா.
மற்ற இருவர், பாஜகவுக்கு கடும் தலைவலியாக இருக்கும் எச்.டி.குமாரசாமி மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தரம் சிங்.
சுரங்க ஊழல் தொடர்பாக யாரையெல்லாம் விசாரிக்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, சுரங்க ஊழல்தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் தரம் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் குமாரசாமி மீது புகார்கள் வந்துள்ளதால் இவர்களை விசாரிக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து கர்நாடக அரசிடம் கேட்டிருந்தது.
இதையடுத்து இதுகுறித்து உச்சநீதிமன்றக்குழுவுக்கு கர்நாடக அரசு தற்போது ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்த மூன்று பேரையும் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனேவ மூன்று பேரையும் விசாரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் மூவரையும் விசாரிக்க கர்நாடக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
இதையடுத்து விரைவில் இந்த மூன்று பேரிடமும் விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.
கர்நாடகத்தில் சுரங்க ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதியூரப்பா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களாக இருந்த ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மிகப் பெரிய அளவில் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் தங்களது பண பலம் மற்றும் மிரட்டல் பலத்தால் எதியூரப்பாவை அடக்கி வைத்திருந்த ரெட்டி சகோதரர்கள், விசாரணை வளையத்திற்குள் சிக்காமல் நழுவி வந்தனர்.
ஆனால் எதியூரப்பாவுக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்புகிளம்பி அவரது பதவி பறி போன பின்னர் ரெட்டி சகோதரர்கள் சிபிஐ வளையத்தில் சிக்கி கைதானார்கள். இந்த நிலையில் இந்த சுரங்கத் தொழில் முறைகேட்டில் முன்னாள் முதல்வர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி மற்றும் தரம்சிங் ஆகியோருக்கும் தொடர்பு உண்டு. அவர்களது ஆட்சிக்காலத்தில் விதிமுறைகள் மீறப்பட்டு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதை எதிர்த்து கிருஷ்ணா உள்ளிட்டோர் மனு செய்தனர். ஆனால் தங்களை விசாரிக்கக் கூடாது என்று அவர்கள் வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து விட்டது.












Click it and Unblock the Notifications