தேசிய புலனாய்வு ஏஜென்சியின் முதல் டைரக்டர் ஜெனரல் ராஜு மரணம்
கொச்சி: என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் முதல் இயக்குநர் ஜெனரலாக இருந்தவரான ராதா வினோத் ராஜு மரணமடைந்தார். அவருக்கு வயது 62.
அமெரிக்காவின் சிஐஏ பாணியில் உருவாக்கப்பட்டதுதான் இந்தியாவின் என்ஐஏ. மும்பையை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேர் சேர்ந்து 3 நாட்கள் சீரழித்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த என்ஐஏ உருவாக்கப்பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்தான் ராஜு. கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர்.
உடல் நலக்குறைவு காரணமாகவும், நுரையீரல் பாதிப்பு காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வியாழக்கிழமை மரணமடைந்தார்.
அவருக்கு அச்சம்மா என்ற மனைவியும், ரேனு, சிந்து என்ற 2 மகள்களும் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில ஐபிஎஸ் அதிகாரியான ராஜு பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
1949ம் ஆண்டு கொச்சியில் பிறந்தவரான ராஜு, 1975ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அதற்கு முன்பு அவர் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக இருந்தார். தாய்மொழியான மலையாளம் தவிர கொங்கனி, இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ் ஆகிய மொழிகளும் இவருக்குத் தெரியும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுப் படையில் இவரும் ஒரு உறுப்பினராக இருந்தார். பல குற்ற மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை திறம்பட கையாண்டவர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டவர்.
2009ம் ஆண்டு இவர் என்ஐஏ இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2 முறை சிபிஐயிலும் பணியாற்றியுள்ளார்.