ஊழல் வழக்கு: பாக். பிரதமர் வேட்பாளர் சகாபுத்தீன், கிலானியின் மகனுக்கு பிடி வாரண்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளரான ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீனுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி அப்பதவியில் இருக்க தகுயில்லாதவர் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்து. இதையடுத்து அவரது பதவி பறிபோனது. பிரதமர் பதவிக்கு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் மக்தூம் சகாபுத்தீன் பரிந்துரைக்கப்பட்டார். அவர் பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள அதே நேரத்தில் அவருக்கு ராவல்பிண்டி நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சகாபுத்தீன் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தடை செய்யப்பட்ட எபிட்ரின் என்ற மருந்தை அதிக அளவில் இறக்குமதி செய்தபோது முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டு தொடர்பாக போதைதடுப்புப் பிரிவின் வேண்டுகோளின்படி ராவல்பிண்டியில் உள்ள போதைத்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சகாபு்த்தீன் மற்றும் கிலானியின் மகன் அலி மூஸா கிலானி ஆகியோருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அந்த இருவரையும் கைது செய்து இரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த சகாபுத்தீனிடம் பிடி வாரண்ட் குறித்து கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் மழுப்பிவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டது போது அலி மூஸா கிலானி தென்னாப்பிரிக்காவில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்தார். இது குறித்து அறிந்தவுடன் அவர் தேனிலவை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.