குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து ஜெயிக்கப்போறது நான்தான்: பி.ஏ. சங்மா நம்பிக்கை
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிசயம் நிகழும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது என்று பி.ஏ.சங்மா தெரிவித்துள்ளார்.
அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா. பின்னர் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சங்மா கூறியிருப்பதாவது:
உலகில் அதிசயங்கள் நிகழ்வது உண்மைதான். எனக்கும் அதிசயங்கள் நிகழ்வதில் நம்பிக்கை உண்டு. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அதிசயம் நடக்க வாய்ப்பு உள்ளது.
கடவுள் எனது பக்கம் இருக்கும்போது தேர்தல் முடியும் முன்னரே நான் தோல்வியடைவேன் என்று கூற முடியாது. அரசியலில் காட்சிகள் மிகவேகமாக மாறும். எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நிகழலாம். தேர்தல் என்பது அரசியல். எனவே இங்கும் மாற்றங்கள் நிகழும். என்ன மாற்றங்கள் வருகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை முன்னிறுத்திய கட்சிகளும், எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளும் அவர்களின் அரசியல் ஆதாயத்துக்காக என்னை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிறர் செய்யும் தவறுகளை மன்னிப்பது என்பது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை. எனவே நாங்கள் எந்த கசப்புணர்வுகளையும் மனதில் வைத்துக் கொள்வது இல்லை. உலகிலேயே மிகப்பெரிய மதம் கிறிஸ்தவம். அதற்கு விசாலமான இதயம் உண்டு. எனவே இங்கும், அங்கும் நடக்கும் சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்த விரும்புவதில்லை.
மக்களின் நலனுக்காகவும், எனது மனசாட்சிப்படியும், ஜனநாயகத்தில் வலுவான போட்டி இருக்க வேண்டும் என்ற கொள்கைக்காகவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் காண்கிறேன். தேர்தலில் எனக்கு ஆதரவு தருமாறு மம்தாவிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இன்னும் காலம் அதிகம் இருக்கிறது. அவரது சாதகமான முடிவுக்காக காத்திருக்கிறேன் என்றார் அவர்.