ஸ்டாலின் மருமகள் குரலில் மோசடி: முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை, திமுக பெண் நிர்வாகி விரைவில் கைது
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி குரலில் பேசி மோசடி செய்தது தொடர்பாக திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஒருவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா குரலில் பேசி யாரோ மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த மோசடிக்கு அவர் பொறுப்பில்லை என்று கூறி வழக்கறிஞர் ரமன்லால் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்தி மோசடி செய்பவரை கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கிருத்திகாவின் குரலில் பேசி மோசடி செய்த தினேஷ்குமார்(21) என்பவர் திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் போலீசாரிடம் சிக்கினார். அவரைப் பிடிக்க சினிமா இணை இயக்குனர் குமரேசன் என்பவர் போலீசாருக்கு உதவினார். தினேஷ்குமார் குமரேசனை செல்போனில் தொடர்புகொண்டு தான் கிருத்திகா உதயநிதியின் தம்பி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு உதவி இயக்குனர் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.50,00 பெற்று ஏமாற்றியுள்ளார். இந்த மோசடி தொடர்பாக குமாருக்கு துணை போன அவரது நண்பன் மணியையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசில் வாக்குமூலம் அளித்த தினேஷ்குமார் திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஒருவர் கூறித் தான் குரல்மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த திமுக பெண் நிர்வாகியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விசாரணையில் தினேஷ்குமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல குரல்களில் பேசி திமுக அமைச்சர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் ஆகியோரை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் பணத்தை ஏமாந்த முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.