தரையில் படுத்த மதுரை ஆதீனம்... தலையேயே காட்டாத நித்தியானந்தா!!

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் இன்று போலீஸார் சோதனை நடத்தியபோது தனது அறையை விட்டு நித்தியானந்தா வெளியே வரவே இல்லையாம். அதேபோல மதுரை ஆதீனத்தை போலீஸார் அணுகியபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தரையில் படுத்துக் கொண்டாராம். இருப்பினும் விடாத போலீஸார் அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தினராம்.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீஸார் நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் புலித் தோல், யானைத் தந்தம் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளக்குத்தூண் போலீஸார் இன்று அதிரடி ரெய்டில் இறங்கினர். கோர்ட் வாரண்ட்டைக் காட்டி விட்டு உள்ளே புகுந்தனர் போலீஸார். இதையடுத்து நித்தியானந்தாவுடன், மதுரை ஆதீனம் அவசர ஆலோசனை நடத்தினார். போலீஸாரை நுழைய அனுமதிக்காமல் இருக்க முடியாது என்று தெரிந்ததும், இருவரும் சரி வரச் சொல்லுங்கள் என்று கூறி விட்டு தத்தமது அறைக்குள் புகுந்து கொண்டனராம்.
அப்போது 2வது மாடியில் மதுரை ஆதீனம் இருப்பதாக தெரிந்து அங்கு போலீஸார் போனார்கள். அப்போது தரையில் படுத்துக் கிடந்தாராம் மதுரை ஆதீனம். என்ன என்று போலீஸார் விசாரித்தபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறினாராம் ஆதீனம். இரு்நதாலும் விடாத போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதேபோல முதல் மாடியில் உள்ள தனது அறைக்குள்ளேயே இருந்து கொண்டாராம் நித்தியானந்தா. அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. அவருடன் வேறு யாரேனும் இருந்தார்களா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications