சாராயத்தை ஊற்றி மக்களைக் கொல்லும் திராவிடக் கட்சிகள்: ராமதாஸ் தாக்கு
பாமக மாநில செயற்குழு கூட்டம் பெரம்பூர் வியாசர்பாடியில் உள்ள ஜானகி மஹால் அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ் பேசியதாவது,
தமிழக அரசின் அகராதியில் டாஸ்மாக் என்றால் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் என்று தான் பொருள். ஆனால் உண்மையில் டாஸ்மாக் என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
அவை,
டாஸ்மாக் - அகால மரணம்
டாஸ்மாக் - 60 வகை நோய்கள்
டாஸ்மாக் - மானம் இழப்பு
டாஸ்மாக் - ஏழ்மை
டாஸ்மாக் - கல்லாமை
டாஸ்மாக் - சாலை விபத்து
டாஸ்மாக் - ஆண்மை குறைதல்
டாஸ்மாக் - குற்றங்களுக்கு எல்லாம் தாய்
டாஸ்மாக் - இளம் கைம்பெண்களை உருவாக்கும் அரக்கன்
இப்படி மதுவின் தீமையையும், அதனால் ஏழைக் குடும்பங்கள் படும்பாட்டையும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். குடியும், போதையும் சாத்தானின் 2 ஆயுதங்கள் என்று காந்தியடிகள் கூறினார். குடிகாரர்கள் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் சட்டம், காவல் துறை உதவி கொண்டு வலுக்கட்டாயமாகவாது மக்களை குடியின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றார் அறிஞர் அண்ணா.
உலகில் உள்ள எந்த அரசும் தனது சொந்த மக்களை கொல்வதில்லை. ஆனால் திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சியி்ல் சாராயத்தை ஊற்றி தமிழக மக்களை கொலை செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மது விற்பனையை பெருக்குவதில் திராவிடக் கட்சிகள் அதிக ஆர்வம் காட்டின. அந்த ஆர்வத்தை மின் திட்டங்களை செய்லபடுத்துவதில் காட்டியிருந்தால் தற்போது இப்படி கடும் மின்வெட்டு ஏற்பட்டிருக்காது என்றார்.