உர விலையை இஷ்டத்துக்கு உயர்த்துகின்றனர்: பிரதமருக்கு ஜெ. புகார் கடிதம்
சென்னை: மத்திய அரசின் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டத்தால் உர விலை உயர்ந்து வருவதால் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களை காக்கும் பொருட்டு ஆழ்ந்த வேதனை தெரிவித்து இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
ஊட்டசத்து சார்ந்த உரமானிய கொள்கையை மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. அது முதல் தமிழகத்துக்கு அளிக்கப்படும் உரங்களின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது.
இது விவசாயிகளின் அடிப்படை தேவைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 28 லட்சம் டன் ரசாயன உரங்கள் தமிழகம் கொள்முதல் செய்கிறது.
ஊட்டசத்து சார்ந்த உரமானிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால், ரசாயன உரங்களுக்கு உற்பத்தி செலவு அல்லது இறக்குமதி செலவு அடிப்படையில், அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரம் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அது முதல் உர நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, உரங்களுக்கு சில்லறை விலைகளை உயர்த்தி வருகின்றன. இது விவசாயிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டசத்துக்கு சார்ந்த உரமானிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல்வேறு உரங்களின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.
குறிப்பாக, இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து உர விலை உயர்வானது செங்குத்தான போக்கில் செல்கிறது. உதாரணமாக 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி., உர மூட்டை விலையை ரூ.910-ல் இருந்து ரூ.1200 ஆகவும், எம்.ஓ.பி. உர மூட்டை விலையை ரூ.650-லிருந்து ரூ.840 ஆகவும் இந்திய பொட்டாஷ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இதேபோன்று அனைத்து வகை உரங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. உர விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உரத்துக்கான மானியம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
டி.ஏ.பி. உரத்துக்கு 2011-12-ல் டன் ஒன்றுக்கு ரூ.19,763 மானியம் அளிக்கப்பட்டது. 2012-13-ல் இந்த மானிய தொகையை ரூ.14,350 ஆக உரத்துறை குறைத்துள்ளது. எம்.ஓ.பி. உரத்துக்கான மானியம் ரூ.16,054-ல் இருந்து ரூ.14,400 ஆக மத்திய அரசு குறைந்துள்ளது. மேலும் யூரியா விலையை கூடுதலாக 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தவும், மானியத்தை குறைக்கவும் உரத்துறை திட்டமிட்டு இருப்பதாக நான் அறிகிறேன்.
உரங்களின் விலை உயர்வு மற்றும் மானியம் ரத்து போன்ற காரணங்களால், விவசாயிகளுக்கு வருமானம் பாதிக்கப்படும். விவசாயத்தில் லாபம் என்பதே பார்க்க முடியாது. விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், தமிழகத்தில் உர விற்பனை மீதான 4 சதவீத வாட் வரியை ரத்து செய்தேன். ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி போன்றவற்றின் மீதான வாட்வரி, 2011, ஜூலை 12ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது.
எனினும், உரங்களுக்கான விலை நிர்ணயம், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை சார்ந்து இருப்பதால், ஊட்டச்சத்து சார்ந்த உரக் கொள்கை உடனடியாக திரும்ப பெறவேண்டும். நிலையான விலை நிர்ணயம் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். உழவர்களை காக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்துக்கு தேவையான உரத்தை ஒதுக்குமாறு உரத்துறைக்கு உத்தரவிட வேண்டும். தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே, உடனடியாக உரம் ஒதுக்கப்பட்டால்தான் தேவையை சமாளிக்க முடியும். உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படகூடாது. ஆகவே, இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மத்திய உரத்துறை அமைச்சராக திமுகவின் மு.க.அழகிரி உள்ள நிலையில், உரத்துறை தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.