ஒரு வருட தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய அபு ஜிண்டால்: ப.சிதம்பரம்
டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதி அபு ஜிண்டாலை ஒரு வருடத்துக்கும் மேலாகத் தேடி வந்தோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அபு ஜிண்டால் குறித்து இந்தியாவுக்குத் தகவல் தந்து உதவியது அமெரிக்கா. மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் கேட்டுக் கொண்டதையடுத்து அவனை இந்தியாவிடம் ஒப்படைத்தது செளதி அரேபியா.
இந்த விவகாரத்தில் மூன்று நாடுகளின் உளவுப் பிரிவுகளும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டன. இந்த விவகாரங்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு சென்றுவிடாத வண்ணம் பெரும் ரகசியம் காக்கப்பட்டது.
மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உயர் மட்டத் தலைவர்கள் செளதி அரேபிய அரசிடம் பேசியும் வந்தனர்.
இதையடுத்து கடந்த 21ம் தேதி அபு ஜிண்டாலை கைது செய்த செளதி போலீசார் அவனை உடனடியாக விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பினர். விமான நிலையத்தில் வைத்து அவனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ஆனால், இந்த விவரத்தை 25ம் தேதி தான் மத்திய அரசு வெளியில் தெரிவித்தது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவனான அபு ஜிண்டாலை கடந்த ஒரு வருடமாக தேடி வந்தோம். அவனது இருப்பிடத்தை அறிந்தோம். பின்னர் கைது செய்தோம். அவனைத் தேடிப் பிடித்து கைது செய்துள்ளோம். இதற்காக இந்தியாவை உலகமே பாராட்டுகிறது என்றார்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் பல நாட்டு உளவுப் பிரிவுகளின் கூட்டு முயற்சி குறித்து உள்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பர்தீனிடம் கேட்டதற்கு, இந்த விஷயங்களை எல்லாம் வெளியில் விளக்க முடியாது. இவை மிக முக்கியமான ரகசிய தகவல்கள். அதை மரத்தில் ஏறி நின்று ஊருக்கே கேட்பது மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இது இந்தியாவின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி என்றார்.












Click it and Unblock the Notifications