புறம்போக்கு நிலத்தை காட்டி பேராசிரியரிடம் ரூ.15 லட்சம் மோசடி: 2 பேர் கைது
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியரிடம் ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு நில மோசடியில் ஈடுபட்ட புரோக்கர், பால் வியாபாரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் ராஜாசிங் ஹாரிங்டன். அவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் உடற்கல்வி பேராசிரியராக பணிபுரிகிறார். அவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகளையைச் சேர்ந்த புரோக்கர் கணேசன், குறிச்சையைச் சேர்ந்த பால் வியாபாரி முத்துராமலிங்கம் ஆகியோர் பாளையங்கோட்டை அருகே புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் ஒரு இடத்தை காட்டி விலை பேசினர்.
இதற்கான அட்வான்ஸ் தொகையாக ரூ.15 லட்சத்தை பேராசிரியரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். ஆனால் அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று அவருக்கு பின்னர் தான் தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் நெல்லை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மெக்லரின் எஸ்கால், எஸ்.ஐ. முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கணேசன், முத்துராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குறிச்சியைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரை தேடி வருகின்றனர்.