ஆஸிக்கு 150 அகதிகளுடன் சென்ற இன்னொரு படகு கவிழ்ந்து 17 பேர் பலி, 23 பேர் மாயம்!
சிட்னி: 150 அகதிகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட படகு இந்தோனேசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 17 பேர் பலியாகினர், 23 பேரைக் காணவில்லை.
இந்தோனேசியாவில் இருந்து 150 அகதிகளுடன் படகு ஒன்று ஆஸ்திரேலியாவின் கிறி்ஸ்துமஸ் தீவுக்கு புறப்பட்டது. அந்த படகு இந்தோனேசிய கடற்பரப்பில் இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 17 பேர் பலியாகினர், 23 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை, 110 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்த 17 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
படகில் பெண்கள், குழந்தைகள் பலர் இருந்ததாகவும், அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. காணாமல் போன 23 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் தான் 200 அகதிகளுடன் இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் கிற்துமஸ் தீவுக்கு சென்ற படகு கவிழ்ந்து 90 பேர் பலியாகினர். தற்போது அதே இடத்தில் மீண்டும் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக அகதிகள் பலர் படகுகளில் வருகின்றனர். ஆனால் அவ்வாறு வரும் படகுகளில் பல விபத்துக்குள்ளாகி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் பிரச்சனை ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.