காங். முகாமிலிருந்து சங்மா பக்கம் தாவிய எம்.பி.-அதிர்ச்சியில் காங்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு இட முடியாது. மாறாக, எம்.பிக்கள் தங்களது விருப்பப்படி வாக்களிக்கலாம். இதனால்தான் சங்மா பெருத்த நம்பிக்கையுடன் மாஜிக் நடக்கும், நானே வெல்வேன் என்று கூறி வருகிறார்.
ஒருவேளை அவரது நம்பிக்கை வென்று விடுமோ என்ற சந்தேகம் எழும் வகையிலான ஒரு நிகழ்ச்சி இன்று நடந்தது. இன்றுதான் பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பிரணாப் முகர்ஜியி்ன் மனுத்தாக்கலின்போது ஒரு குழப்பமும் இல்லை. அதேசமயம், சங்மா வேட்பு மனு தாக்கலின்போதுதான் ஒரு பளீர் ஆச்சரியம் தென்பட்டது.
அதாவது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி அரவிந்த் நேதம் அங்கு காணப்பட்டார். சங்மாவுக்கு ஆதரவாக அவர் வந்திரு்நதார். இவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். சங்மாவும் அதே வகுப்புதான். நேதம், அகில இந்திய பழங்குடியினர் பேரவை என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இதனால் காங்கிரஸ் முகாமில் கிலி பரவியுள்ளது.
இதையடுத்து ஏன் சங்மா மனு தாக்கலின்போது அங்கு இருந்தீர்கள் என்று கேட்டு நேதமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம் காங்கிரஸ். நேதம் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேதமைப் போல மேலும் பலர் சங்மா பக்கம் பாய்வார்களோ என்ற குழப்பமும், சந்தேகமும் காங்கிரஸ் முகாமில் கவலை அலைகளைப் பரவ விட்டுள்ளது.