நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்: அமைச்சர் செந்தூர் பாண்டியன் துவக்கி வைப்பு
நெல்லை: ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
நெல்லையப்பர் கோவில்ஆனிப் பெருந்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுககு சிறப்பு வழிபாடும், இரவு ரத வீதி வலமும் நடைபெற்றது. நேற்று காலை நடராஜர் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வலம் வருதலும், பச்சை சாத்தி நகர் வலம் வருதலும், கங்களநாதர் தங்க சப்பரத்தில் வீதி வலம் வருதலும் நடந்தன.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பார்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா வந்தனர். பின்னர் சுவாமி, அம்பாள் தேர் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், கலெக்டர் செல்வராஜ், மேயர் விஜிலா, மாநகராட்சி கமிஷனர் பொறுப்பு மோகன் உள்பட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications