ஆசிரியைகளை பச்சை ரவிக்கை போட்டு வர பணித்த கேரள அதிகாரி சஸ்பெண்ட்
எர்ணாகுளம்: கேரளாவில் அரசு விழா ஒன்றில் பங்கேற்க வரும் ஆசிரியர்கள் கட்டாயம் பச்சை ரவிக்கையும், முண்டு( புடவை) அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த சுற்றறிக்கையை அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கேரள மாநில கல்வி அமைச்சராக இந்திய யூனியன் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர் உள்ளார். அவர் எர்ணாகுளத்தில் நடைபெறவிருந்த சர்வ சிக்ஷா அபியான் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் வரும் போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆசிரியைகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி வண்ணமான பச்சை வண்ணத்தில் ரவிக்கை அணிந்துவர வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பின்னணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இருப்பதாகவும் அச்சங்கங்கள் குற்றம்சாட்டின.
ஆனால் இந்த சுற்றறிக்கைக்கும் கல்வித்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கல்வி அமைச்சர் அப்து ரப் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த சுற்றறிக்கைக்கு காரணமாக சர்வ சிக்ஷா அபியான் மாவட்ட திட்ட அதிகாரி கே எம். அலியார் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இன்று நடைபெறுவதாக இருந்த சர்ச்சைக்கு காரணமான அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.
அரசு விழாவில் பங்கேற்க வரும் ஆசிரியைகள் பச்சை ரவிக்கை அணிந்து வரவேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டதும் அதற்கு காரணமான கல்வித்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.