மாற்றுத் திறனாளி மகளைக் கருணை கொலை செய்ய அனுமதி கோரிய தாய்
ஈரோடு: மாற்றுத் திறனாளியான தமது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாய் மனு அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அழகர் - ஜெயா தம்பதியினருக்கு 1999-ல் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதலே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இக் குழந்தைக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இப்போது 14 வயதை அடைந்த நிலையில் இச் சிறுமியை 24 மணி நேரமும் யாராவது ஒருவர் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் இச் சிறுமி அதிக சப்தத்துடன் அழுவதால் அருகில் வசிப்பவர்களுக்கும் இத் தம்பதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெயா, தனது மாற்றுத்திறனாளி மகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தனது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
பல தொண்டு நிறுவனங்களிடம் முறையிட்டும் பயனில்லாததால்தான் தாம் இந்த முடிவுக்கு வந்ததாக தாய் ஜெயா தெரிவித்துள்ளார். ஆனால் கருணைக் கொலைக்கு சட்டத்தில் இடமில்லை என்றும் மாற்றுத் திறனாளி சிறுமியை தங்களிடம் ஒப்படைத்தால் பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்றும் ஆட்சியர் சண்முகம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications