பிரிக்கப்பட்ட இரட்டை சகோதரிகளில் ஆராதனா மாரடைப்பால் மரணம்
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிராம் யாதவ், மாயா தம்பதிக்கு கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. மார்பு மற்றும் வயிற்றுப் பகுதி ஒட்டிப் பிறந்த அந்த குழந்தைகளுக்கு ஆராதனா, ஸ்துதி என்று பெயர் வைத்தனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த தம்பதியால் குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் குழந்தைகளை அவர்கள் பிறந்த பாதார் மிஷன் மருத்துவமனையின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளைப் பிரித்தெடுக்க மருத்துவமனை முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 22 டாக்டர்கள் அடங்கிய குழு சுமார் 20 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை பிரித்தெடுத்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு குழந்தைகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தன.
கடந்த 2ம் தேதி மருத்துவமனை ஊழியர்கள் அக்குழந்தைகளின் முதலாவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர். அறுவை சிகிச்சை முடிந்ததில் இருந்தே ஆராதனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஆராதனாவுக்கு அடுத்தடுத்து 2 முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரவு 9.20 மணிக்கு குழந்தை இறந்தது. இந்த தகவல் அறிந்த ஆராதனாவின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இத்தனை நாட்களாக அந்த குழந்தைகளை பராமரித்த மருத்துவமனை ஊழியர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஸ்துதியின் உடல் நிலை நன்றாகத் தேரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.