இலங்கை சிறையில் விடுதலைப் புலி அடித்துக் கொலை!
கொழும்பு: இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி ஒருவர் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இலங்கை வவுனியா சிறையில் கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகள் 38 பேர் கடந்த வெள்ளிக்கிழமை சிறைக் காவலர்கள் மூவரை 18 மணி நேரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாரும் அதிரடிப் படையினரும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி காவலர்களை விடுவித்தனர். பின்னர் விடுதலைப் புலிகளைப் பிரித்து பல்வேறு சிறைகளில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது கொடூர தாக்குதல் ஆரம்பமானது. இரும்புக் கம்பிகளால் புலிகள் தாக்கப்பட்டனர்.
இதில் நெடுங்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் ரகமா மருத்துவமனைக்கு நிமலரூபன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 29.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 6 விடுதலைப் புலிகள் மஹாரா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சிறைக் கைதிகளை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பிக்கள் நிமலரூபன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், மாரடைப்பு காரணமாகவே நிமலரூபன் இறந்ததாக சிறைத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரா கதை விட்டுள்ளார்.
பின்னணியில் உருத்திரகுமாரன்-இலங்கை அரசு புகார்:
இதற்கிடையே சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில், வவுனியா சிறைச் சம்பவம் புலிகளின் உறுமல் ஆகும். இந்த சம்பவத்தின் பின்னணியில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக் கொள்ளும் உருத்திரகுமாரன் இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க 500 புலிகள் முயன்று வருகின்றனர் என்றார்.