அமைச்சர் ஜெயபால் உறுதிமொழி: விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபாலுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி ஜூலை 1 ம் தேதி முதல் கடந்த 12 நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபாலை தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் நல சங்கப் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, விசைப்படகு மீனவர்களுக்கு இறாலுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கே.ஏ.ஜெயபால் உறுதி அளித்தார். இதையடுத்து மீனவர்கள் தங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.