கொமுக பணம் ரூ.10 லட்சம் மோசடி: ஈஸ்வரன் மீது 'பெஸ்ட்' ராமசாமி குற்றச்சாட்டு
கோவை: கொமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மோசடி செய்துள்ளதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொமுக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கடந்த ஓராண்டாக கட்சி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டு வருகின்றார். எந்த முடிவையும் தன்னிச்சையாக அறிவித்து வருகின்றார். மேலும் தனக்குப் பிடிக்காத நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை மாற்றியும், நீக்கியும் வருகிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது கட்சியில் இருந்து என்னையே நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு உண்மையை விளக்கவும், ஈஸ்வரனைப் பற்றிய முழு தகவல்களைத் தெரியப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். வரும் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் கட்சியைப் பலப்படுத்திவிடுவேன்.
கட்சி துவங்கியபோது கொமுக அறக்கட்டளை ஒன்றை துவக்கினேன். இந்த அறக்கட்டளைக்கு எனது சொந்த பணம் ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். மேலும் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் நன்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கியது. ஆக மொத்தம் ரூ.10 லட்சத்தை அறக்கட்டளை பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தேன். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரில் இருவர் கையெழுத்து போட்டால் மட்டுமே அந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியும். ஆனால் நானும், பொருளாளரும் கையெழுத்து போடாத நிலையில் அறக்கட்டளை பெயரில் இருந்த பணம் முழுவதையும் வங்கியில் இருந்து எடுத்து ஈஸ்வரன் மோசடி செய்துவிட்டார்.
தேர்தல் நேரத்தில் கொமுகவுக்கு பல வழிகளில் நன்கொடை வந்தது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல் செலவுக் கணக்கை கட்சி பொருளாளரிடம் ஈஸ்வரன் இதுவரை ஒப்படைக்கவில்லை. அந்த கணக்கை கேட்டதால் தான் இப்போது இந்த விவாகரம் வெடித்துள்ளது என்றார்.