செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன் முற்றுகை: இயக்குநர் சீமான் கைது
செங்கல்பட்டு : செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதிகள் தங்களை திறந்த வெளி முகாம்களுக்கு மாற்றக்கோரி நீண்ட நாட்களாகவே போராடி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த அகதிகளிடம் கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமையன்று செங்கல்பட்டுசிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. இதன்படி இன்று காலையில் சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் சுமார் 500 பேர் அங்கு திரண்டனர்.
செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் சீமான் உள்பட அனைவரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள வேலு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications