4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கு: விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆண்டிபட்டி, புதுக்கோட்டை, புவனகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 2க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது சட்ட விரோதம் என்று குப்புசாமி கூறியிருந்தார்.
அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தாக்கல் செய்த 4 வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா ஆஜராக முடியவில்லை என்றும், எனவே வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.