அசாம் இன மோதலில் 41 பேர் பலி: மே.வங்கத்தில் 10,000 பேர் அகதிகளாக தஞ்சம்

ஒன்றரை லட்சம் அகதிகள்
அசாமின் கோக்ரஜார், சிரான்கண்ட், துப்ரி ஆகிய மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் எரிக்கப்பட்டுவிட்டதால் மொத்தம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அகதிகளாக கிராமங்களைவிட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்தோருக்காக 73 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் பேர் வரை அண்டை மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூடு
இப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும்சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோக்ரஜார் மாவட்டம் ராம்பூர், சபார்கட்டா ஆகிய இடங்களில் நேற்று காலையில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் பல அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்க்கப்பட்டுள்ளன. இதனால் வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது.
13 ஆயிரம் ராணுவத்தினர் குவிப்பு
வன்முறைப் பகுதிகளில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 13 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த பகுதிகளான துப்ரி, கோக்ரஜார், சிராங் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தினர். மேலும் கோக்ரஜார்,சிராங் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக குழு இன்று பார்வையிடுகிறது. இந்தப் பகுதிகளில் தற்போது அமைச்சர்கள் முகாமிட்டு நிலைமைகளை கண்காணித்து வருகின்றனர்.
ரயில் சேவை முற்றிலும் பாதிப்பு
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 2-வது நாளாக ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராஜதானி ரயில் மீதான தாக்குதலில் 4 பெட்டிகள் சேதமடைந்தன. இருப்பினும் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அனைத்து ரயில்களும் மேற்குவங்கத்தின் எல்லையான கூச்பீகாரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டின் பிறபகுதிகளில் இருந்து ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் அசாம் வழியாகத்தான் செல்ல முடியும் என்பதால் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது
வங்கதேச விஷமிகள் காரணமா?
இதனிடையே அசாம் வன்முறை சம்பவங்களுக்கு வங்கதேச சக்திகள் காரணம் என்று கூறப்படுவதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இதுபற்றி கூறுகையில், வங்கதேச விஷமிகள் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டிருக்கலாம் என்பதை மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications