பஞ்சாபில் ரூ.200 கட்டணம் செலுத்தாததால் பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய டாக்டர்கள்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி சுனிதாவுக்கு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததையடுத்து அதை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். குழந்தையை மேலும் சில நாட்களுக்கு இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று தெரிவித்த மருத்துவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சஞ்சீவிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் பலரிடம் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் பணம் இல்லை என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்குபேட்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவர்கள் இன்குபேட்டரை அகற்றினர். இதையடுத்து குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.
இது குறித்து சஞ்சீவ் கூறுகையில்,
எனது குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இன்குபேட்டர் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் இல்லை என்று கொஞ்சம் தயவு காட்டுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் இன்குபேட்டரை அகற்றிவிட்டனர். மேலும் கட்டண பாக்கி இருந்ததால் குழந்தைக்கு ஏற்றிய குலுகோஸையும் நிறுத்திவிட்டனர்.
இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை என்னால் நம்பமுடியவில்லை. குழந்தையின் தந்தையை இது குறித்து புகார் கொடுக்க சொல்லியிருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கிறேன் என்றார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.