அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு 23 கிலோ தங்கம் கடத்திய 5 குஜராஜ் வியாபாரிகள் சிக்கினர்
சென்னை: அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 23 கிலோ தங்கம் கடத்தி வந்த 5 குஜராஜ் வியாபாரிகளிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அதிகளவில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது குஜராத்தை சேர்ந்த நகை வியாபாரிகளான சந்திரகாந்த்(25), ஷரணன்(25), பட்டாரிகள்(24), சோனி(32), கஜேந்திரா(28) ஆகிய 5 பேரிடம் இருந்த சூட்கேஸ்களில் தங்க கட்டிகள், ஆபாரணங்கள், தங்க பிஸ்கெட்கள் என்று மொத்தம் 23 கிலோ எடை கொண்ட தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு தகுந்த ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள தங்கத்தை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்த விசாரணையில், தீபாவளிக்காக சென்னையில் விற்பனை செய்ய அகமதாபாத்தில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.