குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்காக 'காயின்' டாய்லட் கட்டிய சரத்குமார்
குற்றாலம்: குற்றாலத்தில் தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.
தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமார் ரூ.7.50 லட்சம் செலவில் குற்றலாத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காசு போட்டு பயன்படுத்தும் கழிவறையை கட்டியுள்ளார். மெயினருவி அருகே சுமார் 45 சதுர அடியில் அமைக்கப்பட்டு்ள்ள இந்த கழிவறையை பராமரிக்க மனிதர்கள் தேவையில்லை. இரண்டு ரூபாய் அல்லது இரண்டு 1 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் தானாகவே கதவு திறந்து கொள்ளும். பின்னர் உள்ளே உள்ள கதவை திறந்து கொள்ளலாம்.
கழிவானது சுமார் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் டேங்கில் சேகரிக்கப்படுகிறது. அதில் உள்ள பாக்டீரியா தொழில் நுட்பமானது கழிவுகளை சுத்தப்படுத்தி மற்றொரு டேங்கிற்கு வெறும் தண்ணீராக மட்டும் செல்கிறது. இந்த தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தும் அளவுக்கு மறு சுழற்சி செய்யலாம்.
ஆனால் தற்போது குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இந்த மறுசுழற்சி முறை மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கழிவறையில் தண்ணீர், மின்விசிறி வசதி ஆகியவை உள்ளன. கழிவறையை உபயோகப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்த மறந்தாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் சென்சர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.