ஆத்தூரில் மணிமுத்தாறு அணையை திறந்துவிடக் கோரி சாலை மறியல்: நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது
தூத்துக்குடி: வெற்றிலை பயிர்களை காப்பாற்ற மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் விடாததால் ஆத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆத்தூர் பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், விவசாயத்தை பாதுகாக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்கம் மற்றும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் இணைந்து ஆத்தூர் பேருந்து நிலையம் மெயின் பஜாரில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று காலை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மறியலையொட்டி திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் ஆறுமுகநேரி சாகுபுரம், குறும்பூர், ஏரல், முக்கணி வழியாக தூத்துக்குடிக்கு திருப்பிவிடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திருச்செந்தூர் துணை தாசில்தார் செல்வி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வி.ஏ.ஓ. பால் பாண்டியன் ஆகியோர் வந்தனர். ஆனால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு மறுத்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மறியலையொட்டி வடக்கு மற்றும் தெற்கு ஆத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.