புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க திடீர் மறுப்பு

கடந்த திமுக ஆட்சியில் மிகப் பெரும் பொருட் செலவில், அரசினர் ஓமந்தூரார் எஸ்டேட் வளாகத்தில் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சட்டசபையும் அங்கு மாற்றப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கட்டடம் கிடப்பில் போடப்பட்டது. அங்கு அரசு மருத்துவமனை அமையப் போவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். வீரமணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தமிழக அரசு பெரும் பொருட் செலவில் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றும் திட்டத்தை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புதியத் தலைமைச் செயலகத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நிலையில் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நீதிபதிகள் தீர்ப்பை தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும்,இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதை வேறு பெஞ்சுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்த திடீர் முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications