அமெரிக்கா ஹோட்டலில் பெண் ஊழியரை தாக்கிய இந்திய வனத்துறை அதிகாரி கைது
பென்சில்வேனியா : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஹோட்டல் பெண் ஊழியரை அவமதித்ததாக இந்தியாவைச் சேர்ந்த ஐஎப்ஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து 30 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சென்று பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் அனைவரும் பென்சில்வேனியாவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அவர்களில் 1985 ம் ஆண்டில் தேர்வு பெற்ற சுரிந்தர் மகாபாத்ர் என்ற ஐஎப்எஸ் அதிகாரி அங்கிருந்த பெண் ஊழியரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றத்துக்காக இந்திய வனத்துறை அதிகாரி சுரிந்தர் மகாபாத்ராவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் திரேந்திரா பார்கவா, அறையில் இருந்த இணையதளத்தில் பிரச்சினை இருப்பதாக மகாபத்ரா, ஹேட்டல் வரவேற்பரைக்கு போன் செய்துள்ளார். அப்பொழுது அவரது அறைக்கு வந்த பெண் ஊழியர் இணையதள இணைப்பை சரி செய்ய முயன்றுள்ளார். அது முடியாமல் போகவே உடனே அவர் வெளியேறிவிட்டார் என்று கூறினார். அந்த பெண் வெளியேறிய சில மணிநேரத்திற்குள் மகாபத்ராவின் அறைக்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். மகாபத்ரா தாக்கியதாக அந்த பெண் ஊழியர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் மகாபத்ரா எந்த வம்புக்கும் போகாத நேர்மையானவர் என்று ஒருங்கிணைப்பாளர் திரேந்திரா பார்கவா கூறியுள்ளார்.
மகாபாத்ரா இணைச்செயலாளர் அந்தஸ்து உள்ளவர். பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.