லண்டனின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேள்விக்குள்ளாக்கிய 11 வயது சிறுவனின் விமான பயணம்
லண்டன்: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறு லண்டன் நகரம் தீவிரவாதிகளின் இலக்காக இருக்கக் கூடும் என்பதால் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. நாள்தோறும் தீவிரவாதிகள் என சந்தேகிப்போர் கைது என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரு 11 வயது சிறுவன் தனது சாகசத்தால் கேள்விக்குள்ளாக்கி லண்டனையே அதிரச் செய்திருக்கிறான்..
லண்டனில் இருந்து இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்ற விமானத்தில் லண்டனைச் சேர்ந்த 11 வயது சிறுவனும் பயணமாகியிருக்கிறான். அவனை பயணி ஒருவரின் மகன் எனக் கருதியதாலோ என்னவோ சோதனையில் இருந்த அதிகாரிகள் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை..
விமான நடுவானில் சென்று கொண்டிருந்தபோதுதான் விமான பணிப் பெண்களுக்கே தெரிந்தது அந்த சிறுவன் யாருடைய மகனும் அல்ல என்பது. அத்துடன் மட்டுமல்ல.. அந்த சிறுவனிடம் பாஸ்போர்ட், டிக்கெட் எதுவுமே இல்லை என்பதும் அப்போதுதான் தெரியவந்தது.
இது பற்றி உடனடியாக லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதுதான் சிசிடிவி காமிராக்களை இயக்கிப் பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது..விமான நிலையம் இருக்கும் பகுதியில் தனது தாயாருடன் வந்த சிறுவன் அப்படியே விமான நிலையத்துக்குள் நுழைந்துவிட்டான்.
அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டே சக பயணிகளோடு பயணிகளாக விமானத்திலும் ஏறியிருக்கிறான். விமான நிலையத்தில் சோதனை நடத்தும் பணியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் அவனும் விமானத்தில் ஓசியில் பறக்கத் தொடங்கிவிட்டான் என்பதுதான் தெரியவந்ததும் ஆடிப்போயிருக்கின்றனர்.
உடனடியாக சிறுவனிடம் சரியாக சோதனை நடத்தாத பணியாளர்கள் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.
வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக சொல்லும் லண்டனின் பாதுகாப்பு ஓட்டையை ஒரு 11 வயது சிறுவன் சுட்டிக்காட்டியிருக்கிறான். இதுதான் யானை காதுல எறும்பு புகுவது என்பதோ?












Click it and Unblock the Notifications