வடமாநிலங்களில் வெள்ளம்: 36 பேர் பலி, 50 பேர் மாயம்
டேராடூன்: வடமாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு 36 பேர் பலியாகியுள்ளனர், 50 பேரைக் காணவில்லை.
வடமாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கங்கை, யமுனை, சாரதா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவி என்ற இடத்தில் யமுனை ஆற்றிலே அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வெள்ளத்தால் உத்தரகண்ட் மாநிலத்தில் குறைந்தது 12 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதி வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் உத்தரகாசி மற்றும் சமோலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் தரைமட்டமாகின. இதில் 34 பேர் பலியாகினர். மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவி கோரப்பட்டது.
அஸ்சி கங்கா நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் மாயமாகினர். அவர்கள் இறந்துவி்ட்டதாக அறிவிக்கப்பட்டதால் அவர்களையும் சேர்த்து தான் பலி எண்ணிக்கை 34 ஆனது. மேலும் 50 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் மாநிலம் குல்லு மாவட்டத்தில் உள்ள மனாலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மனாலியில் உள்ள பல்வேறு முக்கியமான பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு மீட்பு படையினர் உள்ளூர் அதிகாரிகளின் உதவியோடு மக்களுக்கு உதவி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் செனாப், தாவி, உஜ் மற்றும் பசந்தர் ஆகிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவைத் தொடும் அளவுக்கு ஓடுகிறது.
இந்த மூன்று மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் மீட்பு பணியை முடுக்கிவிட்டுள்ளன.